திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.40 தனித்திருவிருக்குக்குறள் - பொது திருப்பதிகம் பண் - கொல்லி |
கல்லால் நீழல், அல்லாத் தேவை
நல்லார் பேணார், அல்லோம் நாமே.
|
1 |
கொன்றை சூடி, நின்ற தேவை
அன்றி யொன்று, நன்றி லோமே.
|
2 |
கல்லா நெஞ்சின், நில்லான் ஈசன்
சொல்லா தாரோ, டல்லோம் நாமே.
|
3 |
கூற்று தைத்த, நீற்றி னானைப்
போற்று வார்கள், தோற்றி னாரே.
|
4 |
காட்டு ளாடும், பாட்டு ளானை
நாட்டு ளாருந், தேட்டு ளாரே.
|
5 |
தக்கன் வேள்விப் பொக்கந் தீர்த்த
மிக்க தேவர் பக்கத் தோமே.
|
6 |
பெண்ணா ணாய, விண்ணோர் கோவை
நண்ணா தாரை, எண்ணோம் நாமே.
|
7 |
தூர்த்தன் வீரம், தீர்த்த கோவை
ஆத்த மாக, ஏத்தி னோமே.
|
8 |
பூவி னானுந், தாவி னானும்
நாவி னாலும், ஓவி னாரே.
|
9 |
மொட்ட மணர், கட்ட தேரர்
பிட்டர் சொல்லை, விட்டு ளோமே.
|
10 |
அந்தண் காழிப், பந்தன் சொல்லைச்
சிந்தை செய்வோர், உய்ந்து ளோரே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |